Thursday, October 15, 2009

றொபேர்ட் ஸ்ரீவின்சன் சிமித் பேடன் பவல் பிரபு


சாரண ஸ்தாபகர்

றொபேர்ட் ஸ்ரீவின்சன் சிமித் பேடன் பவல் பிரபு. இவரது தந்தையார் எவ்.ஜி. பேடன் பவல், ஓர் மதகுருவும் விஞ்ஞானியுமான இவர் ஒக்ஸ்போட் சர்வகலாசாலை பேராசிரியர் ஆவார். தாய் விஞ்ஞானி அட்மிரல் வில்லியம் ரி சிமித்தின் மகள். 6, ஸ்ரன்கோப் வீதி, லண்டன் -2 இல் 22.02.1857 இல் பேடன் பவல் ஒன்பது பிள்ளைகளுள் எட்டாவதாக ஆறாவது ஆண்மகனாக பிறந்தார். மூன்றாவது வயதில் தந்தையை இழந்தார். இளமையில் கல்வியில் நாட்டம் குன்றியவராயிருந்தாலும் பிறதுறைகளில் சிறந்து விளங்கினார். 1870 இல் பன்னிரண்டு வயதில் சாட்டர்சவுஸ் கல்லூhயில் உபகாரச் சம்பளம் பெற்று உயர் கல்விக்காகச் சேர்ந்தார். இவர் வன வாழ்க்கை, பாசறை வாசம், நீந்தல், படகு ஓட்டுதல், வேட்டையாடுதல் போன்ற வெட்டவெளி வாழ்க்கையில் மிகவும் வல்லவராகத் திகழ்ந்தார். 19 வயதில் தனது பட்டப் படிப்பை முடித்துக்கொண்டு இராணுவத்தில் குதிரைப் படையில் சேர்ந்தார்.

தனது இராணுவ சேவையினை இந்தியா, ஆப்கானிஸ்தான், தென்னாபிரிக்கா ஆகிய நாடுகளில் செய்தார். தனது திறமையினால் 25 வது வயதில் தளபதியானார். இக் காலத்தில் மிருக வேட்டையில் மிகவும் திறமைசாலியாக பன்றிவேட்டைப் பரீட்சை பெற்றார். 1887 ஆம் ஆண்டு தென்னாபிரிக்காவில் சூலவம்ச சுதேசிகளுக்கிடையிலான யுத்தத்திலும் சிறந்த வல்லுனராகத் திகழ்ந்தமையால் சுதேசிகள் இவரது திறமையைப் பாராட்டி “இம்பீசா” என்ற பட்டத்தைச் சூட்டினர். இதன் பொருள் என்றும் துயில் கொள்ளாத ஓநாய் ஆகும். 1897 இல் குதிரைப்படைத் தளபதியானார். 1899 இல் கேர்ணலான இவர் திறான்ஸ்வால் குடியரசுப் போரில் 13.10.1899 இல் தென்னாபிரிக்காவில் மேப்கிங் நகரை எதிர்ப்படைகள் முற்றுகையிட்டபோது தனது திறமையாலும் சிறுவர்களைப் பழக்கி ஒற்று அறிவதன் மூலமும் தனது சிறிய படையுடன் உதவி கிடைக்கும் வரை 217 நாட்களுக்கு மேப்கிங் நகரைப் பாதுகாத்து வெற்றி வீரராகத் திகழ்ந்தார். மேஜர் ஜெனரலாகப் பதவியுயர்வு பெற்றார். 1901 இல் தாயகம் திரும்பினார். இராணுவ சேவைக் காலத்தில் கிடைத்த அனுபவத்தினைக் கொண்டு சாரணியத்திற்கான துணை எனும் நூலை எழுதினார். மக்களிடம் இந் நூல் பெரும் மதிப்புப் பெற்றிருந்தது. முதியவர்களுக்கான இந் நூல் சிறுவர்களிடமும் பெரும் மதிப்பு பெற்றது.

இக்கால வாழ்க்கையில் சிறார்கள் துணிகரச் செயலிற்கும், எதிர்கால வாழ்விற்கும் சிறந்த வல்லுனர்கள் என்பதனை உணர்ந்தார். 1903 இல் இவரது நூலை வாசித்த பெரியோர்களினது வேண்டுகோளினை ஏற்ற இவர் 1907 இல் இங்கிலாந்துக் கல்லூரியிலுள்ள பிறவுன்சி தீவில் 20 பேர் கொண்ட முதலாவது மாதிரிச் சாரணர் பாசறையை நடாத்தி வெற்றிகண்டார். 1908 ஆம் ஆண்டு முற்பகுதியில் “இளைஞர் சாரணியம்” எனும் நூலை ஆறு பிரசுரங்களாக வெளியிட்டார். 1909 ஆம் ஆண்டு இவரது சகோதரி அக்னஸ் முதன் முதல் சாரணியத்தில் சேர்ந்து கொண்ட பெண் ஆவார். 1910 ஆம் ஆண்டு பெண்களுக்கென வழிகாட்டிகள் இயக்கத்தை ஆரம்பித்தார். கிங் எட்லேட்டின் ஆலோசனைக்கு ஏற்ப இராணுவ சேவையிலிருந்து விலகினார். 1912 ஆம் ஆண்டு உலக நாடுகளுக்கான சாரணர் சுற்றுப் பயணத்தை உலக சாரணர்களைச் சந்திப்பதற்காக மேற்கொண்டார். முதலாவது உலக யுத்தம் தடையாக அமைந்தது.

தென் அமெரிக்காவில் யமோக்காவில் சதாம்ரன் துறைமுகத்தில் பேடன் பவலிற்கு சாரணர் அளித்த அணிவகுப்பு மரியாதையினை ஏற்கும் போது கப்பற் சிப்பந்திகளின் வேலை நிறுத்தம் காரணமாக அதே கப்பலில் பிரயாணம் செய்த தகப்பனார் சென் கிளபர்சோம்ஸ் உடன் இருந்த மகள் ஒலெவ் முதன் முதல் பேடன் பவலைக் கண்டார். இவர்கள் மேற்கிந்தியத் தீவுகளுக்கும், தென்னாபிரிக்காவுக்கும் உல்லாசப் பிரயாணிகளாக இறுதிநேர இருக்கை வசதி கிடைத்ததனால் பிரயாணம் செய்தனர். சென்கிளெயரின் மூன்றாவது பிள்ளையான இவர் 22.02.1889 இல் பிறந்தார். இவரும் வெட்டைவெளி வாழ்க்கையிலும், உல்லாசப்பிரயாணம் செய்வதிலும் பிரியர். 30.01.1912 இல் இருவரும் ஒருவரையொருவர் விரும்பி யமேக்காவில் இரகசியப் பதிவுத் திருமணம் செய்து கொண்டனர். புரட்டாதி மாதம் இங்கிலாந்திற்கு பேடன் பவல் திரும்பி வந்து உத்தியோகபூர்வமாக திருமண விடயத்தை அறிவித்தார். 30.10.1912 இல் பாக்ஸ்ரன்பூல் இங்கிலாந்திலுள்ள சென்பீற்றர் சேச்சில் திருமணம் நடைபெற்றது.

இவர்களுக்கு மூன்று பிள்ளைகள். ஒரு மகனும், இரு மகளுமாவார். மகன் பீற்றர் பேடன் பவல். பேடன் பவலிற்குப் பின்னர் தாயுடன் சேர்ந்து உலகப் பிரதம சாரணராக 1963 இல் இறக்கும் வரை பணியாற்றினார். இவரது மனைவி பற்ரியென்ஸ். கீதர், பெற்ரி ஆகிய இருவரும் மகளாவார்.

1916 இல் குருளைச் சாரணியர் இயக்கத்தை ஆரம்பித்தார்.
1918 இல் திரிசாரண இயக்கத்தை ஆரம்பித்தார்
1919 இல் கில்வெல் பயிற்சி நிலையம் ஆரம்பிக்கப்பட்டது.
1920 இல் ஒலிம்பியாவில் நடைபெற்ற உலகச் சாரணர் ஜம்பொறியில் உலகப் பிரதம சாரணராக 06.08.1920 இல் நியமிக்கப்பட்டார்.
1929 இல் பேடன் பவலிற்கு 3 ஆவது உலகச் சாரணர் ஜம்பொறியில் கில்வெல்
பேடன் பவல் பிரபு என்ற பட்;டம் 3ம் ஜோர்ஜ் மன்னனால் வழங்கப்பட்டது. இவ்வாண்டு 20 இலட்சம் சாரணர் இருந்தனர்.
1930 இல் திருமதி பேடன் பவல் உலகப் பிரதம சாரணியாக நியமனம்
செய்யப்பட்டார். இவர் தனது உரையில் என்னால் இயன்ற வரை திறமையாளர் எல்லோருக்கும் எவ்விடத்திலும் பணிசெய்வேன் என்றார்.
1938 ஆம் ஆண்டு தனது 80வது வயதில் இறுதி வாழ்க்கையைக் கழிக்க தன் வாழ்நாளில் மிகப் பிரியமான இடமாகிய ஆபிரிக்காவிலுள்ள கென்யாவிலுள்ள நைஜீரி என்ற இடத்திற்கு சீமாட்டி பேடன் பவலுடன் சென்று வாழ்ந்தார். தனது 80 வயதில் சாரணர் இயக்கம் நன்கு பலமடைந்துவிட்டது அது தானாக வளரும் நான் ஒன்றுமினிச் செய்ய வேண்டியதில்லை என்றார். 08.01.1941 இல் காலமானார். அவரை ஆபிரிக்காவில் மவுண்ட் கெனியாவின் அடித்தளத்திலுள்ள நைஜீரியின் சிறிய மயானத்தில் அடக்கம் செய்யப்பட்டார்.

இவருக்குப் பின் இவரது பணியினை கணவனுக்கு அளித்த வாக்குறுதியை நிறைவேற்றும் வண்ணம் 111 நாடுகளுக்கு 654 விமானப் பிரயாணங்களை மேற்கொண்டு 5 இலட்சம் மைல்கள் சென்று சிறிய தூரத்தினை மோட்டார் வாகனம் மூலமும் மேற்கொண்டு சாரண, சாரணிய இயக்கத்தை வளர்த்தார். இவர் “றீடேர்ஸ் டை ஜெஸ்ற்” என்ற பத்திரிகைக்கு பேட்டி அளிக்கும் போது தன் வாழ் நாளில் சாரணிய சீருடையுடன் இருக்கும் போது உள்ள மகிழ்ச்சியை வேறு எச்சந்தர்ப்பத்திலும் அனுபவிக்கவில்லை என்றார்.

இவர் தனது உலகப் பயணங்களின் போது :

1932 இல் சுவிற்சிலாந்தில் அடல்பொடினில் “எங்கள் சலற்” ரையும்,
1939 இல் இலண்டனில் “எங்கள் ஆக்” கையும்,
1957 இல் மெக்சிக்கோவில் “எங்கள் கபானா” வையும்,
1966 இல் இந்தியாவில் பம்பாயில் புனாவில்சங்கம் பாசறையும் திறந்து வைத்தார்.
1973 இல் “செரஸ் மெடல்” எனும் சிறந்த பெண்விருதினைப்பெற்றார்.

தனது கணவனின் பணியை 60 வருட தலைமைத்துவத்தில் நிறைவேற்றிய இவர் 1974 இல் வைத்தியர்களின் கட்டாய நிர்ப்பந்தத்தின் பிரகாரம் முதுமையாலும், நீரிழிவு நோயினாலும் கம்ரன் கோட்டிலுள்ள தனது வாசல்த்தலத்திலிருந்து வெளியேறி கில்பேட்டிலுள்ள நலன் பேணும் விடுதியில் தங்கியிருந்தார். அங்கும் அவர் தனக்குக் கிடைக்கும் பலதொகைக் கடிதங்களுக்கு தனது எடுத்துச் செல்லும் தட்டச்சு இயந்திரம் மூலம் பதில் அனுப்பிய வண்ணம் இருந்தார். 25.06.1977 இரவு 11.45 மணியில் நித்திரையில் காலமானார். இங்கிலாந்தில் மரணச்சடங்கு நடைபெற்றாலும் இவரது ஆஸ்தி கணவனின் புதைகுழியில் ஆபிரிக்காவில் கலக்கப்பட்டது.


பேடன் பவல் வாழ்க்கையில் நாம் பின்பற்ற வேண்டியது.

01. பிள்ளைப்பாசம், தாய்ப்பாசம், சகோதரத்துவ ஒற்றுமை. (குடும்ப கஸ்டங்களை மறந்த நிலையை உருவாக்கியது)
02. சகல துறையிலும் ஆற்றல், கல்வியை உரிய காலத்தில் பெற்றமை.
03. மண், நாட்டுப்பற்று.
04. எடுத்தகருமத்தை செவ்வனே செய்து முடிப்பது.
05. குடும்பமே சாரணியத்துடன் தொடர்புடையதாக செயற்பட்டமை.
06. இராணுவ வாழ்க்கையின் பின்னர் சாரணியத்தின் மூலம் நாட்டுப் பற்றுள்ள சந்ததியையும், நற்பிரஜை கொள் சமுதாயத்தையும் உருவாக்க வழிவகுத்தார்.

No comments:

Post a Comment